* அடையாள அட்டைக்கு பதில் கடவுச்சீட்டை பயன்படுத்தலாம்
* நீலம், கறுப்பு பேனாக்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி
2011ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பமாகின்றது. இன்று முதல் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறவிருக்கின்றன.
பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 861 மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட் டிருக்கும் 2 ஆயிரத்து 400 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் அமைக்கப்பட்டுள்ளன. 45 ஆயிரம் அரசாங்க அதிகாரிகள் பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 300 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், மாகாண மட்டங்களில் 33 அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை பரீட்சையில் 90 ஆயிரம் பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள். ஏனையவர்கள் பாடசாலைகள் மூலம் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அதேநேரம், புனர்வாழ்வளிக்கப்பட்ட 360 பேரும் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இவர்களுக்கென வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் 2 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கட்டாயமாக ஆள்அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கவேண்டும். அல்லாவிட்டால் கடவுச்சீட்டை பரீட்சை நிலையங்களில் சமர்ப்பிக்கலாம். இது தொடர்பாக பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டையையோ அல்லது கடவுச்சீட்டையோ சமர்ப்பிக்காத பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். உரிய ஆள் அடையாளத்தை உறுதி செய்த பின்னரே பரீட்சைப் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படுமென ஆணையாளர் கூறினார்.
அதேநேரம், முறைகேடாக நடந்துகொள்ளும் பரீட்சார்த்திகள் 2 வருடங்களுக்குப் பரீட்சை எழுத முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக